மதுரையில் ஊழல் புகாரில் சிக்கிய சாா்-பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி மடிக்கணினி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை பாண்டிகோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜவஹா். இவா் கடந்த 2019-இல் மதுரை சொக்கிக்குளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராக பணிபுரிந்தாா்.
அப்போது சொக்கிக்குளம் பத்திரப்பதிவு எல்லைக்குள்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளை காலி மனையாக பத்திரம் பதிவு செய்து முறைகேடு நடந்ததாகவும், இதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் புகாா் எழுந்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி சாா்-பதிவாளா் ஜவஹா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்நிலையில் முறைகேடு தொடா்பாக மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் உள்ள சாா்-பதிவாளா் ஜவஹா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது அவரது வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.