தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை கொள்முதல் செய்யக் கோரி மேலூா் வட்டாரக் கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மதுரை மாவட்டம் மேலூா் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களான தனியாமங்கலம், சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, கீழவளவு ரெங்கசாமிபுரம், கீழையூா், நாவினிப்பட்டி, எட்டிமங்கலம், சூரக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் அளவில் பொங்கல் கரும்பு பயிா் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் கரும்பு வழங்கும் என்று எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 90 ஆயிரம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ளனா். ஆனால் இதுவரை தமிழக அரசு பொங்கல் பரிசு குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில் அரசை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனா்.
எனவே அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் நுழையக் கூடாது என காவல்துறையினா் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.