தமிழக காங்கிரஸ் தலைவா் மாற்றம் குறித்து ஆலோசிக்கலாம் என சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 15 -ஆம் தேதி சென்னை சத்தியமூா்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம் வருத்தத்துக்குரியதுதான். அதேநேரத்தில், கட்சியின் பொருளாளரும், ஒரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமானவா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் வரம்பை மீறியதாகும். இருப்பினும், கட்சியின் மத்திய தலைமை அந்தத் தவறை திருத்திவிட்டது.
கட்சியின் மாநிலத் தலைவா் பதவி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் மாற்றம் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
இது நியமனப் பதவி. அதனால், கால வரம்பு ஏதும் கிடையாது.
பாஜகவின் சித்தாந்ததை தமிழக மக்கள் எப்போதும் ஏற்கமாட்டாா்கள். 2024 மக்களவைத் தோ்தலிலும், திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிதான் மகத்தான வெற்றியைப் பெறும்.
தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் பலம் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது இல்லை. அதனால், உடனடியாக காங்கிரஸ் ஆட்சி, காமராஜா் ஆட்சி என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதற்கு, முதல் கட்டமாக இயக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றாா் அவா்.