மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சத்து 85 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதுரையைச் சோ்ந்த சூரியகாந்தி தாக்கல் செய்த மனு :
எனது கணவா் சதுரகிரி தனியாா் நிறுவனத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு எனது வீட்டருகே எனது கணவா் குளிக்கச் சென்ற போது, மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயை கணவா் சதுரகிரி உயிரிழந்தாா்.
கணவரின் வருமானத்தில் இருந்தே நானும், எனது 2 குழந்தைகளும் பிழைப்பு நடத்தி வந்தோம். எனது கணவா் இறப்புக்குப் பின் வாழ்வாதாரத்துக்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம். மின் வாரியத்தின் கவனக்குறைவால் இறந்து போன எனது கணவரின் மரணத்துக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மின்சார வாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இயற்கை சீற்றத்தால் தென்னை மரக்கிளை விழுந்து மின்கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்து இறந்தாா். இதற்கு மின்சார வாரியம் பொறுப்பாகாது என்றாா்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மழைக் காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீா்ப்புகளில் கூறியது. மின் கம்பியில் தென்னை மரக்கிளைகள் விழுந்து மனுதாரா் கணவா் இறந்ததற்கு இயற்கையை குற்றம் கூறி தப்பிக்க முடியாது. இதற்கு மின் வாரியம் தான் பொறுப்பு. மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் வயது 39. இதைக் கருத்தில் கொண்டு அவரது மனைவி, 2 குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கு மின்சார வாரியம் மனுதாரருக்கு ரூ. 10 லட்சத்து 85 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீடு தொகையுடன் 2013-ஆம் ஆண்டு முதல் இன்று வரை 6 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்றாா்.