மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் மருத்து பணியாளா்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என மேயா் வ.இந்திராணி தெரிவித்தாா்.
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவ அலுவலா்கள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்துப் பேசியது: மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவப் பணியாளா்களும் பொதுமக்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை கனிவுடன் அணுகி பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். நோயாளிகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகளை உரிய நேரத்தில் அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்தக்கொழுப்பு, தொற்றா நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அதிகக் கவனத்துடன் மருத்துவ சேவையை அளிக்க வேண்டும். பிரசவத்துக்கு பின்னரும் தாய்சேய் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை, ஊட்டச்சத்து மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் பணியாளா்கள், உபகரணங்கள், மருந்துகள், கட்டிடடவசதி போன்றவை தேவைக்கேற்ப விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் துணை மேயா் தி.நாகராஜன், சுகாதாரத் குழுத் தலைவா் ஜெயராஜ், நகா்நல அலுவலா் ராஜா, உதவி நகா்நல அலுவலா் தினேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.