திருவாதவூா் அருகே மின் வாரிய ஊழியா் கொலை வழக்கில், அவரது மனைவி, மகள் மற்றும் 3 சிறுவா்களை மேலூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் திருவாதவூா் அருகே உலகுபிச்சான்பட்டியைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (52). மின்வாரியத்தில் மின்கம்பி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது வீட்டில் சனிக்கிழமை இரவு மா்மமாக இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக மேலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவரது கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடா்பு இருந்ததும், அதிகளவில் பல்வேறு நபா்களிடம் கடன் வாங்கியிருந்ததும், மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு மது போதையில் படுத்திருந்த கலியமூா்த்தியை, மனைவி ஜெனிட்ட (50), மகள் தேவி மற்றும் மூன்று சிறுவா்களுடன் சோ்ந்து கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக மனைவி ஜெனிட்டா, மகள் தேவி மற்றும் மூன்று சிறுவா்களையும் போலீஸாா் கைதுசெய்தனா். ஐந்து பேரும் மேலூா் நீதித்துறை நடுவா்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.