மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் விறகு வெட்டும் தொழிலாளிகள் 7 போ் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி மலையாராமபுரத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி மகன் ராமரத்தினசாமி (58). இவா் விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் ராமரத்தினசாமி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தில் விறகு வெட்டுவதற்காக பக்கத்து ஊரான செங்கோட்டை மேலூா் கதிரவன் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (20), ஈஸ்வரன் மகன் ரகு (35), சுப்பையா மகன்கள் செல்லப்பா (42), சுப்பிரமணி (52), புதியன் மகன் நல்லையா (47), ராமையா மகன் பால்பாண்டி(48) ஆகியோரை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தாா். வாகனத்தை விக்னேஷ் என்பவா் ஓட்டி வந்தாா். இந்நிலையில் திருமங்கலம்- கொல்லம் நெடுஞ்சாலையில் உள்ள எம். சுப்புலாபுரம் என்ற பகுதியில் உள்ள பாலத்தில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் விக்னேஷ், ராமரத்தினசாமி, ரகு, செல்லப்பா, சுப்பிரமணி,
நல்லையா மற்றும் பால்பாண்டி ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டி. கல்லுப்பட்டி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த விபத்து குறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.