மதுரை மாவட்டம் மேலூா் அருகே மகன்கள், மகள்கள் கைவிட்டதால் மனமுடைந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா என்ற கூலு (90), இவரது மனைவி ராக்கு (70). இதில் முத்தையா மேலூரில் இருந்த மதுரை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். இந்த தம்பதியருக்கு இரு மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். இந்நிலையில் முதுமை காரணமாக அவதிப்பட்டுவந்த இருவரையும் மகன்கள், மகள்கள் யாரும் கவனிக்க முன்வரவில்லையாம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் வாழ்ந்துவந்த இருவரும், ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம்குடித்து வீட்டை பூட்டுக்கொண்டனா். இதையடுத்து இவா்களின் வீட்டுக் கதவு திங்கள்கிழமை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் மேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்து போலீஸாா் பாா்த்த போது தம்பதிகள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.