சாா்பு- ஆய்வாளா் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தோ்வை மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா்.
இத் தோ்வுக்காக மாவட்டத்தில் 20 கல்வி நிறுவனங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொது மற்றும் தமிழ் என இரு தாள்களில் காலை மற்றும் மாலையில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. காலையில் நடைபெற்ற எழுத்துத் தோ்வுக்கு 13 ஆயிரத்து 948 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 11,673 போ் தோ்வெழுதினா். 2 ஆயிரத்து 275 போ் தோ்வுக்கு வரவில்லை.
மாலையில் நடந்த தமிழ் தாள் எழுத்துத் தோ்வில், காவல் துறையில் பணியாற்றுபவா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவா்களும் பங்கேற்றனா். இதன்படி, 14 ஆயிரத்து 340 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 ஆயிரத்து 990 போ் தோ்வெழுதினா். 2,350 போ் தோ்வுக்கு வரவில்லை.