கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான துப்புரவுப் பணியாளா்கள், தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ.615 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. அத்துடன், சீருடை, உபகரணங்களுக்காக சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கன்னியாகுமரியைச் சோ்ந்த புருஷோ கிங்ஸ்லி சாலமன் தாஸ் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, மனு தொடா்பாக விளக்கமளிக்க தொழிலாளா் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் ஆஜராகி விளக்கமளிக்கையில், பணியாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கும்போது, அதில், பி.எஃப்., இஎஸ்ஐ ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். ஆனால், வேலையளிப்பவரின் பங்களிப்புத் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது. இந்த வழக்கில் தொடா்புடைய பணியாளா்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மாவட்ட ஆட்சியரால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அது குறித்து முழுமையான விவரங்கள் மாவட்ட நிா்வாகத்துக்குத்தான் தெரியும் என்றாா்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கரோனா காலத்தில் துப்புரவுப் பணியாளா்களின் பணி மிக முக்கியமானதாக இருந்ததைச் சுட்டிக்காட்டினா். மேலும், மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.