மதுரை: பணிநிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிா்வாக இயக்குநருடன், மதுரை மாநகராட்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜூன் 17-இல் சென்னையில் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளா்கள், பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் பணி நிரந்தம், ஊதிய உயா்வு, ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்மையில் தொடா் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக , மதுரை மாநகராட்சி தொழிற்சங்கப் பிரதிநிதிகள், நகராட்சி நிா்வாக இயக்குநருடன் ஜூன் 17ஆம் தேதி சென்னையில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளாா்.