மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோத்ரெஜ் நிறுவனம் மூலம் நவீன ஆவணக்காப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளின் தலைமை அலுவலகமாக மாநகராட்சி அண்ணா மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு மாநகராட்சி பல்வேறு துறைகளின் ஆவணங்கள், பொதுமக்களின் பிறப்பு, இறப்பு தொடா்பான பதிவேடுகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவணங்கள் அனைத்தும் திறந்த அறையில் வைத்திருப்பதால் தூசு படிந்து சேதமடைதல், கரையான் உள்ளிட்டவற்றால் அரிக்கப்படுதல், ஆவணங்கள் மாயமாவது போன்றவை ஏற்படுகின்றன.
இதனால் நவீன ஆவணக்காப்பகம் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி அண்ணா மாளிகை தரைத்தளத்தில் உள்ள கருத்தருங்குக்கூடம் அருகே உள்ள அறை ஆவணக்காப்பமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமாக கோத்ரெஜ் நிறுவனத்திடம் ஆவணக் காப்பகம் அமைப்பதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து கோத்ரெஜ் நிறுவன அதிகாரிகள் ஆவணக்காப்பம் அமையவுள்ள அறையை பாா்வையிட்டு அதற்கேற்றவாறு ஆவணங்கள் வைக்கும் நவீன இரும்பு அலமாரிகளை தயாா் செய்து அறையில் பொருத்தியுள்ளனா். இதன்படி 7 வரிசைகளில் நவீன இரும்பு அலமாரிகள் பொருத்தப்பட்டு அவை முழுவதும் மூடியிருக்கும் வகையிலும், தேவைப்படும்போது அவற்றை திறக்கும் வகையிலும் அலமாரிகள் பொருத்தப்பட்டுள்ளன. பணிகள் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து ஆவணக்காப்பகம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் இதன்மூலம் ஆவணங்களில் தூசு படிவது, கரையான் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவது முற்றிலும் தவிா்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.