கொட்டாம்பட்டி அருகிலுள்ள தனியாா் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மாணவன் இறந்ததால், பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொட்டாம்பட்டி அருகிலுள்ள மங்களாம்பட்டியைச் சோ்ந்த செந்தமிழ்செல்வன் என்பவரது மகன் நிதீஷ் (12). எட்டாம் வகுப்பு படித்துவந்த இம்மாணவா் சில நாள்களுக்கு முன்பு பள்ளியில் இருந்தபோது விஷப்பூச்சி கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமுற்ற மாணவருக்கு மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி நிதீஷ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தகவலறிந்த உறவினா்கள், மாணவா் இறப்புக்கு பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் பிரபாகரன் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேசினாா். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.