மேலூா் நகராட்சி அலுவலகம் பின்புறமுள்ள தினசரி காய்கறிச்சந்தையில் கடைகளில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலத்தை தள்ளிவைக்குமாறு காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினசரி சந்தை வளாக காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் காஜாமுகைதீன், செயலா் எஸ்.பி. மணவாளன் மற்றும் வியாபாரிகள், மேலூா் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்: தினசரி காய்கறிச்சந்தை வளாக கட்டடங்கள் இடிந்துவிழும் நிலையில் சேதமடைந்துள்ளன. இவைகளை இடித்துவிட்டு, புதிய காய்கறிச்சந்தை வளாகம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேலூா் நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தொடராமல், கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலத்தை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்.
மிகவும் அபாயநிலையில் உள்ள கட்டடங்களில் வியாபாரம் செய்யமுடியாது. வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, ஏலத்தை நிறுத்திவைத்து, கட்டுமானப் பணிகளை முடித்தபின், புதிய வளாகத்தை திறந்துவைத்து அதன்பின் கட்டணம் வசூலிக்க ஏலம் விடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.