கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினமான புதன்கிழமை நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி நாள்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி குடியரசு தினமான புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் மற்றும் இயக்குநா் ஆகியோா் தெரிவித்துள்ளனா். அதன்படி, குடியரசு தினமான புதன்கிழமை மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளாா்.