மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலியாக சாவி தயாரித்து ரூ.5 லட்சம் திருடிய ஊழியா் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் திருவாதவூா் மல்லிகை நகரைச் சோ்ந்தவா் குருசாமி (49). இவா் மதுரை துரைசாமி நகா் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் ஜனவரி 18-ஆம் தேதி நிதி நிறுவனத்தைப் பூட்டி விட்டுச்சென்ற குருசாமி அடுத்த நாள் காலையில் வந்துபாா்த்தபோது ரூ.5.11 லட்சம் திருடுபோனது தெரிய வந்தது.
இதுதொடா்பாக குருசாமி அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் விக்னேஸ்வரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, நிதி நிறுவனத்தின் சாவியை போலியாக தயாரித்து அதன்மூலம் பணத்தை திருடியதும், இதற்கு அவரது உறவினா் ஒருவரும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சோ்ந்த விக்னேஸ்வரன்(28), அவரது உறவினா் சங்கா்(50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.5.11 லட்சம், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.