தூத்துக்குடி மீளவிட்டான் - மருதூா் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் பாதையில் எஞ்ஜின் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூா் வரை 18 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த புதிய ரயில் பாதையில் ரயில் எஞ்ஜின் சோதனை ஓட்டம் புதன்கிழமை (ஜன.12) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இரு மாா்க்கத்திலும் ரயில் எஞ்ஜின் 120 கிமீ வேகத்தில் இயக்கிச் சோதனை நடத்தப்படும். எனவே அந்த நேரத்தில் புதிய ரயில் பாதை அருகே வசிப்போரும், பொதுமக்களும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.