தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் வழங்கக் கோரிய மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின நல அலுவலா் 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் தாக்கல் செய்த மனு :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் தூய்மைப் பணியாளா்களாக ஏராளமானோா் பணியாற்றி வருகிறோம்.
எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், பணியமா்த்தப்பட்ட நாளிலிருந்து நிலுவையில் உள்ள தொகையினை விரைந்து வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது மட்டுமன்றி நிலுவையில் உள்ள தொகையினை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின நல அலுவலா் சட்டத்துக்குள்பட்டு 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.