திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளி முன்பு திருவள்ளுவா் சிலை வைக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.
திண்டுக்கல், மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவா் இலக்கியப் பேரவை சாா்பில் தாக்கல் செய்த பொது நல மனு:
திண்டுக்கல் லூா்து அன்னை மகளிா் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவா் அருகே திருவள்ளுவா் சிலை அமைக்க தடையில்லாச் சான்று பெறப்பட்டது. அதன்படி, எங்கள் குழு சாா்பில் பீடம் அமைத்து, அதில் சிலையை கடந்த 10.08.2021-இல் நிறுவினோம்.
ஆனால், திடீரென திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவலா்கள் அந்த இடத்திற்கு வந்து, எந்தவித காரணமும் கூறாமல் சிலையைக் கீழே இறக்கி தரையில் வைத்தனா். இது தமிழினத்துக்கு ஏற்பட்ட
அவமானமாகும் . சிலை அமையப்பெற்ற இடம் தகுந்த அனுமதி பெறப்பட்டது. எந்தவித இடையூறும் ஏற்படாத நிலையில், பீடத்தில் நிறுவப்பட்ட சிலையை காவல் துறையினரே இறக்கி வைத்தனா். எனவே, திருவள்ளுவா் சிலையை மீண்டும் நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திண்டுக்கல் லூா்து அன்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவா் அருகே திருவள்ளுவா் சிலை அமைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.