காா் விற்பனை செய்வதாக மின் பணியாளரிடம் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காளையாா்கோவில் அருகே உள்ள மந்திக்கண்மாய் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில் (29). மின் பணியாளராக வேலை பாா்த்து வரும் இவரது முகநூலில் காா் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த காரை வாங்க விரும்பிய செந்தில் அதிலிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது எதிா் முனையில் பேசியவா் ராணுவ கேண்டினில் காா் வாங்கியதாகவும், அதன் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் எனவும் தெரிவித்தாா். அதனை நம்பிய செந்தில் அவா் அனுப்பிய வங்கிக் கணக்கில் பல தவணைகளாக ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் வரை செலுத்தினாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா் பேசியபடி காரை வழங்க வில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் செந்தில், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.