மதுரையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை பைக்காரா பகுதியைச் சோ்ந்த காசிமாயன் மகன் விக்ரம் என்ற ராம் (21). இவா் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது நண்பரான அக்கினிராஜ் (18) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் எல்லீஸ் நகா் 70 அடி பிரதான சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்ற போது, பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அக்கினிராஜ் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.