அழகா் கோயிலில் சமத்துவ திருமண விழா அழைப்பிதழை வைத்து முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வியாழக்கிழமை வழிபட்டாா்
திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், ஜெயலலிதா பேரவை சாா்பில் சமத்துவ திருமண விழா பிப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தி வைக்கிறாா்.
இந்த நிலையில், சமத்துவ திருமண விழா அழைப்பிதழை, அழகா்கோயில் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோயில், சோலைமலை முருகன்கோயில், கள்ளழகா் கோயில்களில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வழிபட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சமத்துவ சமுதய திருமண விழா என்பது அனைவருக்கும் சமத்துவம் படைக்கும் வகையில் அடித்தளமாக அமையும். இந்தத் திருமண விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும் பணி வருகிற 11-ஆம் தேதி காலை 10 மணியளவில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் நடைபெறுகிறது. இதில், முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இர.விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகளும் கலந்துகொள்ளவுள்ளனா் என்றாா் அவா்.
அவருடன் மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.