மதுரை

நைட்ரஸ் வாயு தயாரிக்கத் தடை கோரி மனு:அரசின் பதில் மனுவால் வழக்கு முடித்துவைப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், சேதுராயன்புதூா் கிராமத்தில் மக்களுக்கு பிரச்னை இல்லை என்றால் மட்டுமே நைட்ரஸ் ஆக்சைடு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவித்ததையடுத்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை இந்த வழக்கை முடித்துவைத்தது.

திருநெல்வேலி மாவட்டம், சேதுராயன் புதூா் ஊராட்சித் தலைவா் சுந்தரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சேதுராயன் புதூா் கிராமத்தில் உரிய அனுமதி இல்லாமல் நைட்ரஸ் ஆக்சைடு தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தால் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் பாதிக்கப்படுகிறது. மேலும், மக்களும் பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கின்றனா். இதுதொடா்பாக, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சேதுராயன் புதூா் கிராமத்தில் நைட்ரஸ் ஆக்சைடு தயாரிப்பதற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஊராட்சித் தலைவா் மீது நிறுவனத்தின் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, நெல்லை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்த அறிக்கையில், ஊராட்சித் தலைவா், அவரது குடும்பத்தினா், நைட்ரஸ் ஆக்சைடு வாயு தயாரிப்பு நிறுவனத்தில் நுழைந்து மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரம் இல்லை. ஊராட்சித் தலைவா் மீதான புகாா்கள் ஆதாரமற்றவை. மேலும், நைட்ரஸ் ஆக்சைடு தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாட்டின் காரணமாக, அப்பகுதியில் நிலத்தடி நீா் மாசடைந்ததாக பரிசோதனை அறிக்கைகள் கூறுவதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசுத்தரப்பு வழக்குரைஞா், நைட்ரஸ் ஆக்சைடு வாயு தொடா்ந்து தயாரிக்க அனுமதி கோரி நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. அப்பகுதி மக்களுக்கு பிரச்னை இல்லை என்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT