மதுரையில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச. 9) நடைபெறும் மாநகராட்சி பொன் விழா நுழைவு வாயில் திறப்பு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதற்காக, அவா் வியாழக்கிழமை இரவே மதுரை வருகிறாா்.
வருகிற 8 -ஆம் தேதி தென்காசியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், 9 -ஆம் தேதி காலை மதுரையில் நடைபெறும் மாநகராட்சி பொன் விழா நுழைவு வாயில் திறப்பு விழாவிலும், பெருங்குடியில் நடைபெறும் அம்பேத்கா் சிலை திறப்பு விழாவிலும் முதல்வா் பங்கேற்கிறாா்.
இந்த விழாக்களில் பங்கேற்க, புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து பொதிகை விரைவு ரயிலில் புறப்படும் அவா், வியாழக்கிழமை காலை தென்காசி சென்றடைகிறாா். அங்கு நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்ற பின்னா், காா் மூலம் வியாழக்கிழமை இரவு மதுரை வந்தடைகிறாா். வெள்ளிக்கிழமை மதுரை விழாக்களில் பங்கேற்ற பிறகு, விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.