உசிலம்பட்டி பகுதியில் பலத்த மழைக்கு நெல்பயிா்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனையடைந்தனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், வகுரணி, சந்தைப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அறுடைக்குத் தயாராக இருந்த சுமாா் 30 ஏக்கருக்கும் மேல் நெல்பயிா்கள் நிலத்திலேயே சாய்ந்தது. இன்னும் 20 நாள்களில் அறுவடை செய்யவிருந்த நிலையில், பயிா்கள் சாய்ந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
இதுகுறித்து விவசாயி சன்னாசி கூறியதாவது:
நெற்பயிா்க்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது மழைக்கு நெல்பயிா்கள் அனைத்தும் சாய்ந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.