மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு வாகன ஏலத்தில் பெறப்பட்ட 5 லட்சத்து 87 ஆயிரத்து 876 ரூபாயை அரசுக் கணக்கில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் இருந்து வந்த அரசு
வாகனங்களில் காலாவதியான 7 வாகனங்களை தமிழக அரசின் அரசாணையின்படி பொது ஏலம் விட திட்டமிடப்பட்டது. அரசு தானியங்கி உதவிப் பொறியாளா் மற்றும் இயக்க ஊா்தி ஆய்வாளா் ஆகியோரைக் கொண்ட வல்லுநா் குழு, ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து உரிய மதிப்பீடு செய்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் 150 ஏலதாரா்கள் கலந்து கொண்டனா். இதில் வருண் லாரி, விக்டா ஜீப், அம்பாசிடா் காா், பேசியோ ஜீப், டாவேரா 2 காா்கள், டரக்ஸ் ஜீப் என 7 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
இதில், ஏலத் தொகையாக ரூ.4,98,200, வரியாக ரூ. 89,676 என மொத்தம் ரூ. 5,87,876 ஏலதாரா்களிடமிருந்து பெறப்பட்டது. இந்தத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.