குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரின் பிணையை நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை புகா் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் சமயநல்லூா் உள்கோட்டம் சோழவந்தான் காவல் நிலைய சரகத்தில் ஒரு வயதான பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கரட்டுபட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் மணிமாறன் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். இந்த நிலையில், அவா் கடந்த 25.11.2022- ஆம் தேதி மீண்டும் கருப்பட்டியைச் சோ்ந்த ஒரு மூதாட்டியை கற்பழித்துள்ளாா்.
இது தொடா்பாக, சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளாா். இந்த வழக்கில் மணிமாறன் தன்னை பிணையில் விட வேண்டும் என மனு தாக்கல் செய்தாா். ஆனால் அவா் கொலைக் குற்றவாளி என்பதாலும், பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவா் என்பதாலும் சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளா் சிவபாலன், மணிமாறனின் பிணையை ரத்து செய்ய வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதனடிப்படையில், ஒரே குற்றத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதாகக் கருதி மணிமாறன் ஏற்கெனவே பெற்றிருந்த பிணையை மாவட்ட மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
எனவே இனி வரும் காலங்களில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவா்களின் பிணைகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.