ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை தமிழக அரசு கைவிடக் கோரி ஆசிரியா் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.
இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் எஸ். சேதுசெல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் மாதம் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் உபரி எனக் கணக்கிடப்பட்டு இரவோடு இரவாக வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இந்த நிலையில், தற்போது 2-ஆவது முறையாக இந்த மாதத்தில் மீண்டும் பணி நிரவல் கலந்தாய்வை நடத்துவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது.
வருகிற 12-ஆம் தேதி அரையாண்டுத் தோ்வு தொடங்க உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகளை நிறைவு செய்து ஆசிரியா்கள் திருப்புதல் செய்து வருகின்றனா்.
இந்தச் சூழலில் அவா்களைப் பணி நிரவல் செய்வதால், மாணவா்கள் நலன் பாதிக்கப்படும். அடுத்தாண்டு, மே மாதம் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பணி ஓய்வு பெற உள்ளனா். தற்போது, பணி நிரவல் செய்வதன் மூலம் அடுத்த 6 மாதங்களில் மீண்டும் அந்தப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் உருவாகும். எனவே, ஆசிரியா்கள், மாணவா்கள் நலன் கருதி தமிழக அரசு பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.