மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் வருமானம் 15 ஆண்டுகளில் ரூ.100 கோடி!

DIN

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளில் வசூலான உண்டியல் தொகை மட்டும் ரூ.100 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் ஆன்மிக அடையாளமாக மட்டுமன்றி, தொன்மைக்குரிய பெருமிதமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக இக்கோவிலைச் சார்ந்துள்ள பொருளாதாரம் மதுரையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகிறது.

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிலின் உள்ளே பக்தர்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் மீண்டும் பழைய சுறுசுறுப்பை மீனாட்சியம்மன் கோவில் அடையத் தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்களின் காணிக்கையைப் பெறுவதற்கு கோவிலுக்குள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோவிலின் உண்டியலில் மட்டும் எவ்வளவு வசூலாகியுள்ளது? என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ தன்னார்வலர் முத்துப்பாண்டி என்பவர் கோவில் நிர்வாகத்திடம் தகவல் கேட்டிருந்தார். அதில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கி 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 913 ரூபாய் வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் பெருந்தொற்றுக் காலத்துக்கு சற்று முந்தைய ஆண்டான 2018-2019-இல் மட்டும் அதிகபட்சமாக 9 கோடியே 82 லட்சத்து 84 ஆயிரத்து 220 ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த 2008-2009-ஆம் ஆண்டில் மிகக் குறைவாக 3 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து 221 ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வோராண்டும் படிப்படியாக உண்டியல் வருமானம் அதிகரித்தே வருகிறது. இடையில் பெருந்தொற்றுக் காலங்களில் மட்டும் உண்டியல் வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. 

முதல் ஐந்தாண்டு காலமான 2008-2009 முதல் 2012-2013 வரை ரூ.24,83,73,164-ம், 2-ஆவது ஐந்தாண்டு காலமான 2013-2014 முதல் 2017-2018 வரை ரூ.40,31,85,880-ம், 3-ஆவது ஐந்தாண்டுகளில் 2018-2019 முதல் 2022-2023 வரை ரூ.35,05,01,869 (நவம்பர் 31, 2022 வரை) வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

SCROLL FOR NEXT