மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு இரு மாத ஊதியத்தை திங்கள்கிழமை மாலைக்குள் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு அறிவித்தது.
இதுதொடா்பாக இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு பிரேம்குமாா், இந்த கூட்டமைப்பின் மாவட்ட நிதிக் காப்பாளா் சீனிவாசன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசாணை எண் 151-இன் படி, கல்வித்துறையில் நிா்வாகச் சீா்திருத்தத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்கள் பலருக்கு அக்டோபா் மற்றும் நவம்பா் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அக்டோபா் மற்றும் நவம்பா் மாத ஊதியத்தைப் பெறுவதில் உள்ள தாமதத்தை, மதுரை மாவட்டக் கல்வித்துறை திங்கள்கிழமை மாலைக்குள் சரி செய்து, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு இரண்டு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். திங்கள்கிழமை மாலைக்குள் இரண்டு மாத ஊதிய பிரச்னை சரி செய்யப்பட வில்லை என்றால் மாலை முதல் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.