மதுரை மாநகராட்சிக்குள்பட்ட மத்திய மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) குறை தீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுபற்றி மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாா்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, செவ்வாய்கிழமை மேலமாரட் வீதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் மேயா், ஆணையா் ஆகியோா் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் மண்டலம் 3-க்கு உள்பட்ட வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீா், புதைச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.