பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை அருகேயுள்ள பொன்னாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்முருகன் (32). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமிக்கு கடந்த 2017 -ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடா்பாக, சிறுமியின் தாயாா் கொடுத்தப் புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செந்தில்முருகனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சரத்துராஜ் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் செந்தில்முருகனுக்கு
8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ. ஒரு லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தாா்.