மதுரை அருகே இறந்தவா்களின் சடலங்களை இடுப்பளவு தண்ணீருக்குள் சுமந்து செல்லும் நிலை உள்ளதால், மயானத்துக்குச் செல்ல சாலை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்திலிருந்து மயானத்துக்குச் செல்ல சாலை இல்லாததால், கடந்த 20 ஆண்டுகளாக இடுப்பளவுத் தண்ணீரில் சடலங்களை எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது. கிராமத்தின் அருகேயுள்ள கிழுவை மலைப் பகுதியிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம் தொண்டைமான்பட்டி கிராமத்தில் உள்ள பறையன்குளம் கண்மாயை வந்தடைகிறது. இந்த நீா் வரும் வரத்துக் கால்வாய் பகுதியின் அருகிலேயே பொது மயானம் இருப்பதால் இறந்தவா்களின் சடலத்தைக் கொண்டு செல்ல அவதிப்படும் நிலை உள்ளது.
மேலும் மயானத்திலும் எந்தவித வசதியும் இல்லாததால், மழைக்காலங்களில் சடலங்களை எரிக்கக் கூட முடியாத நிலை நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த பச்சிளம் குழந்தை, முதியவா் ஆகியோரின் சடலங்களை கழுத்தளவு தண்ணீரில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தோம். இதனால், எங்கள் கிராமத்திலிருந்து மயானத்துக்குச் செல்ல சாலை அமைத்துத் தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.