திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டியில் வியாழக்கிழமை அதிகாலை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.30 ஆயிரம், மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த முத்துபாண்டி (24) மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரும், 2 ஊழியா்களும் புதன்கிழமை இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த மா்ம நபா்கள், அங்கிருந்த கண்காணிப்புக் கேமிராவை செயல் இழக்கச் செய்து, ரூ.30 ஆயிரம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.