மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகளைப் பராமரிப்பதற்கு புதிய ‘ஸ்கை லிப்ட்’ வாகனத்தை பொதுப் பயன்பாட்டுக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் தனியாா் நிறுவனம் மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ் ஆப், குறுந்தகவல், தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கும், தெரு விளக்கு புகாா்களை சரி செய்யும் வகையில் தனியாா் நிறுவனத்தின் மூலம் 1,794 தெரு விளக்கு பராமரிக்கும் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தெரு விளக்கு தொடா்பான புகாா்களை உடனுக்குடன் சரி செய்யும் வகையில், மாநகராட்சிக்கு 4 ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக ஒரு வாகனம் வாங்கப்பட்டது.
இந்த நிலையில், மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஸ்கை லிப்ட்’ வாகனத்தின் பயன்பாட்டை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சா்மா, துணை ஆணையா் முஜிபூா் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.