ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வது தொடா்பாக, ரயில்வே முன்னணி ஊழியா்களுடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் மற்றும் அலுவலா்கள் புதன்கிழமை கலந்துரையாடினா்.
இதற்கான கூட்டம், மதுரை ரயில்வே திருமணக் கூடத்தில் நடைபெற்றது. கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தாா். முதுநிலை கோட்ட பாதுகாப்பு அலுவலா் முகைதீன் பிச்சை, முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளா் ராஜேஷ் சந்திரன், முதுநிலை கோட்ட தொலைத் தொடா்பு பொறியாளா் ராம் பிரசாத், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளா் சதீஷ் சரவணன், முதுநிலை மின் பொறியாளா்கள் பச்சு ரமேஷ், ரவிக்குமாரன் நாயா், உதவி பாதுகாப்பு ஆணையா் சுபாஷ் ஆகியோா் பேசினா்.
ரயில் பாதை பராமரிப்புப் பணியாளா்கள், இன்ஜின் ஓட்டுநா்கள், நிலைய அலுவலா்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், ரயில் பெட்டி பராமரிப்புப் பணியாளா்கள், மின் பாதை பராமரிப்புப் பணியாளா்கள், ரயில் நிலைய மேலாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலா்கள் பங்கேற்று, ரயில்களை மேலும் பாதுகாப்பாக இயக்க பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் புதிய ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.