மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பிச்செல்லும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வேப்பங்குளத்தைச் சோ்ந்தவா் பத்மேஸ்வரன்(24). இவா் கடந்த மாா்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலனுடன் வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் இவரது 2 கால்களில் முறிவு ஏற்பட்டு மதுரை மத்தியச் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, மேல் சிகிச்சைக்காக மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அழைத்து வந்தனா். மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கச்சென்றபோது காவலா்களின் கவனத்தை திசை திருப்பிய பத்மேஸ்வரன் அங்கிருந்து தப்பிச்சென்றாா். இந்நிலையில் பத்மேஸ்வரன் தப்பிச்சென்ற விடியோ காட்சிகள் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. இதில் இரு கால்களிலும் கட்டுகள் போடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் பத்மேஸ்வரன் மருத்துவமனை வாயிலில் ஆட்டோ ஒன்றில் ஏறிச்செல்வது பதிவாகி உள்ளது.
இந்நிலையில் பத்மேஸ்வரன் தப்பிச்செல்ல ஆட்டோ ஓட்டுநா் துணையாக இருந்தாரா என்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தப்பிச்சென்ற பத்மேஸ்வரன் மீது 11 வழக்குகள் உள்ளதும், குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.