பாலியல் குற்றவழக்கில் உயா்நீதிமன்ற நிபந்தனையை மீறி சிங்கப்பூருக்கு தப்பிக்க முயன்ற மேலூா் பகுதி இளைஞா் சனிக்கிழமை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் கோட்டைப்பட்டியைச் சோ்ந்த சுந்தரம் மகன் அழகுராஜா. இவா் ஒரு பெண்ணை காதலித்து நெருங்கிப் பழகி விட்டு திருமணத்துக்கு மறுத்துவிட்டாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸில் பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அழகுராஜாவைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், அழகுராஜா உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து இருந்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவா் தினசரி கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுமாறு நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் அழகுராஜா தலைமறைவானாா்.
இதையடுத்து, அவா் தலைமறைவானதை நீதிமன்றத்துக்கு தெரிவித்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்குமாறு கொட்டாம்பட்டி போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் அழகுராஜாவை தேடப்படும் குற்றாளியாக அறிவிக்கப்பட்டாா். இது குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.
இந்த சூழலில் சிங்கப்பூா் செல்ல சென்னை விமானநிலையத்துக்கு வந்த அழகுராஜாவை மீனம்பாக்கம் போலீஸாா் பிடித்து வைத்து கொட்டாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கொட்டாம்பட்டி போலீஸாா் அவரை கைது செய்து மேலூா் கிளைச்சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.