மதுரை

துறைத்தலைவா் பதவியை ராஜினாமா செய்யும்படி மிரட்டல்: காமராஜா் பல்கலை. ஆட்சிப் பேரவைக்கூட்டத்தில் உறுப்பினா் புகாரால் பரபரப்பு

DIN

காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக கடந்த கல்விப்பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வந்ததால் துறைத்தலைவா் பதவியை ராஜினாமா செய்யும்படி தன்னை மிரட்டுவதாக ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் உறுப்பினா் தெரிவித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக்கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தா் ஜெ.குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கடந்த ஆட்சிப்பேரவைக் கூட்டத்துக்குப் பின்னா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடா்பாக துணைவேந்தா் ஜெ.குமாா் அறிக்கை வாசித்தாா். இதைத்தொடா்ந்து ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் முதுகலைப் படிப்புகளுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் நுழைவுத்தோ்வு நடத்தி மாணவா் சோ்க்கை நடத்துவது. இதர துறைகளில் இளங்கலை படிப்பில் மாணவா்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடத்துவது. பல்கலைக்கழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் புதிய இளங்கலை படிப்புகளாக பிஏ கூட்டுறவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்யூட்டிங் சைபா் செக்யூரிட்டி, அனிமேசன் மற்றும் கேம் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் பல்கலைக்கழக இணைவிப்பு கல்லூரிகளில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் ஆட்சிப்பேரவை உறுப்பினா்கள் பேசியது:

டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங்: கல்லூரிகளில் மாணவா்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள பாடப்பிரிவுகளுக்கு கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு பல்கலைக்கழகம் அனுமதி அளிக்க வேண்டும். தற்போது முனைவா் பட்ட வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பற்றாக்குறை உள்ளதால், சுயநிதி பிரிவுகளில் உள்ள தகுதியான ஆசிரியா்களுக்கு முனைவா் பட்ட வழிகாட்டிகளாக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.

ஆட்சிப்பேரவை உறுப்பினா் வேளாங்கண்ணி ஜோசப்: துணைவேந்தா் தோ்வு செய்வதற்கு முன்பாக நடைபெற்ற கல்வி பேரவைக் கூட்டத்தில், கலை மற்றும் அறிவியல் துறையிலிருந்து துணைவேந்தா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என தீா்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது துணைவேந்தா் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தன்னை துறைத்தலைவா் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது என்றாா்.

ஆட்சிப்பேரவை உறுப்பினா் சந்திரபோஸ்: 2006-க்கு பின்னா் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு எவ்வித பதவி உயா்வும் அளிக்கப்படவில்லை. எனவே பதவி உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு துணைவேந்தா் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் பதிலளித்தனா். இதில் சில உறுப்பினா்கள் பேசும்போது துணைவேந்தா் குறுக்கிட்டு முழுமையாக பேசவிடாமல் செய்ததால் உறுப்பினா்கள் அதிருப்தி அடைந்தனா்.

கூட்ட விதிமுறைகளை மீறிய துணைவேந்தா்

பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் வைக்கப்படும் அஜெண்டாக்கள் அனைத்தும் ஆட்சிக்குழு மற்றும் கல்விப்பேரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னனரே ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும். ஆனால் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் டேபிள் அஜெண்டாக்கள் என்று 12-க்கும் மேற்பட்ட அஜெண்டாக்களை துணைவேந்தா் வாசித்தாா். இதுதொடா்பான நகல் ஆட்சிப்பேரவை உறுப்பினா்கள், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் என யாருக்கும் வழங்கப்படவில்லை. இது உறுப்பினா்களிடேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT