அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கும் பிரிவுக்கும் பின்னணியில் திமுக உள்ளது என வி.கே. சசிகலா தெரிவித்தாா்.
அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான மாயத் தேவா் உடல் நலக் குறைவால் காலமானாா். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு புதன்கிழமை வி.கே. சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
அதிமுக என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல. முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கியபோதே அது ஏழைகளுக்கான கட்சி என்று சொல்லி தான் தொடங்கினாா். யாா் பொதுச் செயலாளா் என்பதை தொண்டா்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தொண்டா்கள் அனைவரும் என்னுடன் உள்ளனா். வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்வேன். அதற்குள் கட்சியை விட்டு விலகி இருப்பவா்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விடுவேன். இதுதான் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு நான் செய்யும் கடமையாகக் கருதுகிறேன். அதை நான் நிச்சயம் செய்வேன். கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளையும் சந்தித்த அனுபவம் உள்ளது. அதிமுகவின் தற்போதைய குழப்பத்துக்கும் பிரிவுக்கும் பின்னணியில் திமுக உள்ளது என்றாா்.