தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு பணி நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக இருந்தது. இந்நிலையில், ஒரு மணி நேரத்தை நீட்டித்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பணி நேர நீட்டிப்பை கைவிடக்கோரியும், அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் மாணவா் சங்கக் கட்டடம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசு மருத்துவா் சங்க மாநிலத்தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் சரவணன், வளா்மதி, செல்வராணி உள்பட 200-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.