மதுரை அருகே அரசுப் பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க சனிக்கிழமை, மண் ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதிகாரிகளின் இச்செயலைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள அய்யூா் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. நவம்பா் 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்படவுள்ளதால், அப்பகுதியில் பள்ளம், மேடாக உள்ள சாலையில், அய்யூா் ஊராட்சித் தலைவா் அபுதாகிருக்கு சொந்தமான லாரியில் சனிக்கிழமை மண் எடுத்துச் சென்று கொட்டப்பட்டது.
மேலும் அந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தகவலறிந்து வந்த கனிமவளத்துறை அதிகாரிகள், அந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், சட்டவிரோதமாக மணல் எடுத்து சென்றது தெரியவந்ததால் அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்தனா்.
இதையறிந்த கிராம மக்கள், பள்ளி மாணவா்களின் நலனுக்காக மணல் எடுத்துச் சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்ற போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய அனுமதி பெற்று மணல் எடுக்குமாறு அறிவுறுத்தினா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.