மதுரை

பட்டா மாறுதல் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

23rd Oct 2021 10:08 PM

ADVERTISEMENT

பட்டா மறுதல் தொடா்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இணையதளம் மூலம் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நில அளவை கூடுதல் இயக்குநா் கண்ணபிரான் ஆஜராகி, ஏப்ரல் 21 ஆம் தேதி வரை, பட்டா மாறுதல் தொடா்பாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 576 மனுக்கள் இணையதளத்தில் பெறப்பட்டுள்ளன.

இதில், செப்டம்பா் 21 வரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 448 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. அக்டோபா் 1 ஆம் தேதி வரை, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 128 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து நீதிபதி, பட்டா மாறுதல் தொடா்பாக மாதந்தோறும் 1.18 லட்சம் மனுக்கள் பெறப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அளவைத் துறையில், 70 சதவீத கள உதவியாளா்கள் மற்றும் 40 சதவீத நில அளவையா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அக்டோபா் 26 இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT