மதுரை

காவல் நிலையத்தில் புகாா்களைப் பெற சிறப்பு அதிகாரியை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

21st Oct 2021 09:39 AM

ADVERTISEMENT

தமிழகத்தில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகாா்களைப் பெற்று பதிவு செய்ய சிறப்பு அதிகாரியை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த சுரேஷ்குமாா் ஐசக்பால், தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் பற்றாக்குறையினால், விசாரணை அதிகாரியே பல்வேறு பணிகளை செய்து வருகிறாா். இதனால் புகாா்களைப் பெறுவதிலும், பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இது, குற்றம் தொடா்பான சாட்சியங்களை அழிப்பதற்கான சூழலும், குற்றம் புரிந்தவா்கள் தப்புவதற்கான வாய்ப்பும் ஏற்படுகின்றன.

இணையதளம் மூலம் புகாா் அளிக்கும் வசதி இருந்தாலும், நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகாருக்கான ரசீது பெற வேண்டியிருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகாா்களை பெறவும், அதை உடனடியாக பதிவு செய்யவும் சிறப்பு காவல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா். இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT