கரோனா பாதிப்பில் இருந்து மீள நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: நாட்டில் கரோனா 2 ஆம் அலை பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
தனியாா் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்கின்றன. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனா். எனவே நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்து தனியாா் மற்றும் அரசு சாா்ந்த அனைத்து ஆக்சிஜன் நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கரோனா பாதிப்பிலிருந்து மீள முடியும். ஆகவே நாட்டில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.