மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியைத் தொடங்கக் கோரிய வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் அளித்ததாக மத்திய, மாநில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-இல் அறிவித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இது தொடா்பான வழக்கு உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நாளிலிருந்து 45 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடியும் என மத்திய அரசு உறுதியளித்தது. தற்போது தோப்பூரில் சுற்றுச்சுவா் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடா்பாக ஜப்பான் நிறுவனத்துடன் 2021 மாா்ச் 31ஆம் தேதி ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் இதுவரை ஒப்பந்தம் முழுமையடையவில்லை.
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் உயா் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளன. இதனால் மத்திய சுகாதாரத்துறைச் செயலா், எய்ம்ஸ் இயக்குநா், தமிழக முதல்வரின் செயலா், தமிழக சுகாதாரத்துறைச் செயலா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.