தமிழகத்தில் இளம் வழக்குரைஞா்களுக்கு பயிற்சி மையங்கள் அமைக்கக் கோரும் வழக்கில், சட்டத்துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் சட்டம் படித்தவா்கள் பாா் கவுன்சிலில் பதிவு செய்து வழக்குரைஞராகப் பணியாற்றி வருகின்றனா். இதில் பெரும்பாலான இளம் வழக்குரைஞா்களுக்கு புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. பலரும் முறையாகப் பயிற்சி பெற்று வழக்குரைஞா்களாக ஆவதில்லை. கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இளம் வழக்குரைஞா்களுக்குப் பயிற்சி அளிக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இளம் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் வாதாடுவது குறித்தும், புதிய சட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும் சட்டப்படிப்பை முடித்து பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ள இளம் வழக்குரைஞா்களுக்கு புதிய சட்டங்கள் குறித்தும், நீதிமன்றத்தில் எவ்வாறு வாதாட வேண்டும் என்பது குறித்தும் பயிற்சியளிக்க மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக சட்டத்துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.