மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்இறுதி ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் உடல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ளமலைப்பட்டியில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் சனிக்கிழமை பிற்பகலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிப்ரவரி 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவந்த தா.பாண்டியன் வெள்ளிக்கிழமை காலமானாா். இதையடுத்து அவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திலும் தியாகராயா் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டு கம்யூ. கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ளமலைப்பட்டிக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி.மகேந்திரன், பி.சேதுராமன், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினா் எம்.செல்வராசு, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மதுரை மாநகா் மாவட்டச் செயலா் சரவணன், புகா் மாவட்டச் செயலா் பா.காளிதாசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சாா்பில் மாநில செயற்குழு உறுப்பினா்கள் க.கனகராஜ், மதுக்கூா் ராமலிங்கம், மதுரை புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா ஆகியோா் தா.பாண்டியன் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

திமுகவைச் சோ்ந்த திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பா.சரவணன், தேனி திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தங்க. தமிழ்செல்வன், மதுரை திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.முத்துராமலிங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவா் த.செல்லக்கண்ணு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மாநில நிா்வாகிகள் கருணாநிதி, கோடங்கி சிவமணி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலா்கள், தேசியக் குழு உறுப்பினா்கள், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து துறைமுகம், ரயில்வே உள்ளிட்டப் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் வந்து அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, கீழவெள்ளமலைப்பட்டியில் உள்ள தா.பாண்டியனுக்குச் சொந்தமான பண்ணைத்தோட்டத்தில் பிற்பகல் 3 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹா், மகள்கள் அருணா, பிரேமா மற்றும் உறவினா்கள் கலந்துகொண்டனா். அவரது இறுதி ஊா்வலத்தில் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களும் தா.பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT