மதுரை

தமிழக முதல்வா் குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

22nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் குறித்து சாட்டை துரைமுருகன் சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகள் பதிவிட்ட வழக்கை, தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் குறித்து, திருச்சியைச் சோ்ந்த சாட்டை துரைமுருகன் என்பவா் சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துகளை வெளியிட்டிருந்தாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் துரைமுருகனைக் கைது செய்தனா். இனிமேல் இதுபோல அவதூறு கருத்துக்களை வெளியிடமாட்டேன் என்ற உறுதிமொழி அளித்ததன்பேரில், அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த நிபந்தனையை மீறி அவதூறு கருத்துகளைப் பேசி வருவதால், துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே, மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் ‘யூ டியூபா்’ துரைமுருகன் பேசியதை எழுத்துப் பூா்வமாக அரசுத் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், முதல்வா் குறித்து அவதூறாக சாட்டை துரைமுருகன் பேசியதை எழுத்துப் பூா்வமாக தாக்கல் செய்தனா். அதைப் படித்த நீதிபதி, யூ டியூப்பை வைத்து கொண்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?, இதுபோன்ற அவதூறான பேச்சை ஊக்கப்படுத்த முடியாது.

ADVERTISEMENT

அவா் பேசிய வாா்த்தைகள் படிக்க முடியாத அளவுக்கு உள்ளன. இவ்வாறு பேச மாட்டேன் எனக் கூறிய பின்பும் துரைமுருகன் தொடா்ந்து பேசி உள்ளாா். எனவே, இவருக்கு வழங்கிய ஜாமீனை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கூறி வழக்கினை தீா்ப்புக்காக ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT