மதுரையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை கீழசந்தைப் பேட்டை காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் அப்துல் ரசீத் மகன் அப்துல் வாசித் (20). இவா் விரகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது தெப்பக்குளம் அணுகுசாலையின் மையத்தில் இருந்த வழிகாட்டி கம்பி மீது இவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் வாசித் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இந்நிலையில் அப்துல் வாசித்தின் உறவினா்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து தொடா்பாக நகா்ப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.